எகிப்தில் விமானத்தை கடத்தியவருக்கு ஆயுள் தண்டனை

288 0

எகிப்தில் இருந்து சைப்ரஸ் நாட்டிற்கு விமானத்தை கடத்திய நபருக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

எகிப்து நாட்டைச் சேர்ந்தவர் சைபுதீன் முஸ்தப்பா. இவர் கடந்த 2016 ம் ஆண்டு மார்ச் மாதம் அலெக்சாண்ட்ரியா நகரில் இருந்து கெய்ரோ நகருக்கு சென்று கொண்டிருந்த விமானத்தை 72 பயணிகளுடன் சைப்ரஸ் நாட்டிற்கு கடத்தி கொண்டு சென்றார். வெடிபொருட்கள் வைத்திருப்பதாக விமானியை மிரட்டி சைப்ரஸ் நாட்டில் உள்ள லார்கனா நகரில் விமானத்தை தரையிறக்க செய்தார். பின்பு அவரது முன்னாள் மனைவியை பார்க்க வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர் சிறிது நேரத்தில் பயணிகள் அனைவரையும் விடுவித்தார்.
இதையடுத்து சைப்ரஸ் நாட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். எகிப்து நாட்டில், அலெக்சாண்ட்ரியா குற்றவியல் நீதிமன்றத்தில் அவர்மீது வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணைக்காக எகிப்து நாட்டிற்கு கொண்டுவரப்பட்டார்.
விசாரணையில் அவர் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர் எனவும் அந்த இயக்கத்தின் கொள்கைகளை பரப்ப முற்பட்டதும் நிரூபணமானது. இதையடுத்து அவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. எகிப்து நாட்டில் ஆயுள் தண்டனை காலம் 25 ஆண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.