ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெறுவதற்கான அனைத்து செயற்றிட்டங்களும் முழுமையடைந்துள்ளன. இறுதித் தருணத்தில் சுதந்திர கட்சியின் தலைவர் ஜனாதிபதி நிச்சயம் பொதுஜன பெரமுனவுடன் இணைவார் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.
பத்தரமுல்லையில் உள்ள அவரது பிரத்தியேக காரியாலயத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நலன் விரும்பிகள் என்று குறிப்பிட்டுக் கொள்பவர்களினாலே சுதந்திர கட்சி பாரிய பின்னடைவினை எதிர்வரும் காலங்களில் அடையும். பரந்து பட்ட கூட்டணியின் ஊடாக சுதந்திர கட்சியும், பொதுஜன பெரமுனவும் இணைய வேண்டும் என்று வெளிமட்டத்தில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டாலும் இன்றும் சுதந்திர கட்சியில் ஒரு தரப்பினர் ஐக்கிய தேசிய கட்சிக்கு விசுவாசிகளாகவே செயற்படுகின்றார்கள்.
பொதுஜன பெரமுனவின் கொள்கைத்திட்டங்கள் நவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கியதாக காணப்படுகின்றது. தேர்தலில் வெற்றி பெறுவதற்கான அனைத்துச் செயற்பாடுகளும் முழுமைப்படுத்தப்பட்டுள்ளன. நிச்சயம் பொதுஜன பெரமுன அமோக வெற்றி பெறும்.
சுதந்திர கட்சியினை பலவீனப்படுத்தும் தரப்பினரது உண்மைத் தன்மையினை ஜனாதிபதிக்கு எடுத்துரைக்க பலமுறை முயற்சித்தும் அவை தோல்வியினையே தழுவியது. இந்நிலைமை தொடருமாயின் மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியின் ஆதிக்கத்தின் கீழ் சுதந்திரக் கட்சி செயற்படவேண்டிய நிலைமை தோற்றம் பெறும் இதற்கு ஜனாதிபதி ஒருபோதும் இடமளிக்கக் கூடாது.
ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற குண்டுத்தாக்குதலைத் தொடர்ந்து அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இதுவரையில் எவ்வித குற்றங்களுக்கும் அவர் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை. சதொச நிறுவன முறைகேடுகள் தொடர்பில் அந்நிறுவனத்தில் சேவையாற்றியவர்கள் தற்போது முறைப்பாடுகளை முன் வைத்துள்ளார்கள்.
ஆகவே ஜனா திபதி பாரபட்சமின்றி தேசிய நிதி மோசடியாளர்களுக்கு எதிராக செயற்படுதல் அவசியமாகும். நிச்சயம் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் சட்டத்தின் முன் தண்டிக்கப்பட வேண்டும் என்றார்.