ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை நியமிக்க வேண்டும் என்று ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளதுடன் அவ்வாறு களமிறங்குவதற்கு மறுப்புத் தெரிவிக்கப்பட்டால் பரந்துபட்ட கூட்டணியை அமைத்து அதன் வேட்பாளராக சஜித் பிரேமதாசவை போட்டியிடவைப்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில் கட்சிக்குள் தொடர்ந்தும் நெருக்கடிகள் நிலவி வருகின்றது. இந்நிலையில் ஐக்கிய தேசிய முன்னணியின் கூட்டணிக் கட்சிகள் தனித்தனியே சந்திப்புக்களை மேற்கொண்டு தீர்மானங்களை முன்னெடுத்து வருகின்றன.
நேற்று முன்தினம் இரவு சபாநாயகர் கரு ஜெயசூரியவை சந்தித்த அமைசர் சம்பிக்க ரணவக்க ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து கலந்துரையாடல் ஒன்றினை முன்னெடுத்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில் அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் எடுப்பதில் எந்த அர்த்தமும் இல்லை, ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் இந்த விடயத்தை கலந்துரையாடி அதில் பெரும்பான்மை ஆதரவை பெறும் நபர் யார் என்பதை பார்க்க வேண்டும். மக்களின் செல்வாக்கை பெற்றவரும் பிரபலமான நபராகவும் கட்சியில் இருப்பவரையே வேட்பாளராக களமிறக்க வேண்டும். அவ்வாறு களமிறக்கினால் மட்டுமே கூட்டணியாக எம்மால் வெற்றி பெற முடியும். இந்த விடயத்தில் இரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தி இரகசியமாக வேட்பாளரை களமிறக்கி எந்த பயனும் இல்லை. ஆகவே இது குறித்து நீங்களும் கவனம் செலுத்த வேண்டும். தனித்து தீர்மானம் எடுத்தால் கட்சியாக இணைந்து பயணிக்கவும் எவரும் முன்வரப்போவதில்லை, கட்சி இரண்டாக பிளவுபடும். ஆகவே உங்களின் நிலைப்பாட்டை பிரதமரிடம் எடுத்து கூறி ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் ஒரு தீர்மானம் எடுக்க வலியுறுத்த வேண்டும் என்ற காரணிகளை அமைச்சர் சம்பிக்க ரணவக்க சபாநாயகர் கருஜயசூரியவிடம் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் நேற்று பாராளுமன்ற கட்டிடத்தொகுதியிலும் ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர் சஜித் பிரேமதாசவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இதன்போதும் பரந்த கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பது குறித்தே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பில் ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களான ரவூப் ஹக்கீம் , சம்பிக்கரணவக்க, பழனிதிகாம்பரம், ரிஷாத் பதியூதின் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.
ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் அமைச்சர் சஜித் பிரேமதாசவை களமிறக்க எதிர்ப்பு தெரிவிக்கப்படுமானால் அந்த முயற்சியை கைவிட்டு ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகள் அனைத்தையும் மற்றும் தம்முடன் இணைந்து பயணிக்கக்கூடிய தமிழ், முஸ்லிம் கட்சிகள் அனைத்தையும் இணைந்துக்கொண்டு பரந்த கூட்டணி ஒன்றினை உருவாக்கி அதன் வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாசவை நியமிப்போம் என்ற யோசனை இவர்கள் முன்வைத்துள்ளனர்.
இதனை அமைச்சர் சஜித் பிரேமதாசவிடமும் கூறியுள்ளதுடன் இந்த வேலைத்திட்டம் குறித்த துரித நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு செயற்படுமாறும் வலியுறுத்தியுள்ளனர்.