கல்வியுடன் மத நம்பிக்கைக்கும் மாணவர்கள் முக்கியத்துவம் வழங்க வேண்டும்-ஏ.ஜே.எம். முஸம்மில்

243 0

பாடசாலைக் கல்வியுடன், அவரவர் நம்பிக்கை கொள்ளும் மத செயற்பாடுகளுக்கும் மாணவர்கள் முக்கியத்துவம் வழங்க வேண்டும் என மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தெரிவித்துள்ளார்.

கொட்டாவ வடக்கு தர்மபால வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 3 மாட்டிக் கட்டடத்தை மாணவர்களுக்குக் கையளிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேல் மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டில் 900 இலட்சம் ரூபாய்கள் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த 2 மாடிக் கட்டடம் நேற்று (12) திறந்து வைக்கப்பட்டது.

அங்குத் தொடர்ந்தும் உரையாற்றிய அவர், உலக நாடுகளுடன், குறிப்பாக ஆசியா நாடுகளுடன் பார்க்கையில் நூற்றுக்கு 95 சதவீதமானவர்களுக்கு எழுத, வாசிக்கத் தெரிந்த ஒரு சிறிய நாடு இலங்கை. இலங்கை கல்விக்கு மிகவும் முக்கியத்துவம் வழங்கியுள்ளது. இலவசக் கல்வி முறை நடைமுறைப்படுத்தப்படுகிறது. சிறந்த கல்வியைக் கற்ற மாணவர்கள் எல்லா துறைகளிலும் திறமைகளை வெளிக்காட்டி வருகின்றனர்.

ஆகவே, கல்வியின் முக்கியத்துவத்தை நாம் மாணவர்களுக்கு உணர்த்தியுள்ளோம். அதேவேளை, கல்வியுடன் அவரவர் நம்பிக்கை கொள்ளும் மத செயற்பாடுகளுக்கும் மாணவர்கள் முக்கியத்துவம் வழங்க வேண்டும். மதத்திற்கு மதிப்பில்லாத கல்வியில் எந்தவிதப் பயனும் இல்லை எனவும் ஆளுநர் முஸம்மில் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மேல் மாகாண முன்னாள் முதலமைச்சர் இசுர தேவப்பிரிய, மேல் மாகாண செயலாளர் பிரதீப் யசரத் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.