ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தில் ஒருபோதும் பின்வாங்கப்போவதில்லை – சஜித்

229 0

ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக களமிறங்குவேன் என்ற நிலைப்பாட்டிலிருந்து ஒருபோதும் பின்வாங்கப்போவதில்லை என்று அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் மாநாடு, கொழும்பு சுகததாஸ உள்ளக விளையாட்டரங்களில் இடம்பெற்றது.

அமைச்சர் சஜித் பிரேமதாஸ தலைமையில் இடம்பெற்ற இந்த மாநாட்டில், அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, கபீர் ஹாசிம், ஹரின் பெர்னான்டோ, சந்திரானி பண்டார ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது, அமைச்சர் சஜித் பிரேதமதாஸவை ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்து, கட்சியின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களால் தீர்மானமொன்றும் நிறைவேற்றப்பட்டது.

இந்த மாநாட்டில் உரையாற்றும்போதே அமைச்சர் சஜித் மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “சிலர் என்னிடம் முன்வைத்த காலை பின்வைக்க வேண்டாம் என்று கூறிவருகிறார்கள். சகோதரர்களே நான் இவ்வேளையில் ஒன்றைக் கூறிக்கொள்கிறேன்.

எனக்கு கடந்த காலங்களில், பிரதமர் பதவி தட்டில் வைத்து தரப்பட்டபோது, நான் அதனை வேண்டாம் என்று நிராகரித்திருந்தேன்.

எனது கட்சி மீதும் எமது கட்சித் தலைவர் மீதும் நான் கொண்டுள்ள மரியாதையின் காரணத்தினாலேயே நான் அன்று அதனை நிராகரித்திருந்தேன்.

இந்த நிலையில்தான் தற்போது இந்த நிலைப்பாட்டுக்கும் நான் வந்துள்ளேன். எனவே, எமது பயணத்தில் ஒரு அடியை அல்ல ஒரு மில்லி மீற்றர் அளவுக்கூட பின்னோக்கி வரமாட்டேன் என்பதை நான் உங்களுக்கு உறுதியாக இவ்வேளையில் கூறிக்கொள்கிறேன்” என மேலும் தெரிவித்தார்.