ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை தவிர வேறு எவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டு அவர் தேர்தலில் வெற்றி பெற்றாலும் ஐ.தே.கவின் தலைமைப் பொறுப்பு தொடர்ந்தும் ரணில் விக்கிரமசிங்கவிடமே இருக்கும் என்றும், அடுத்த ஆறு ஆண்டுகாலத்துக்கு அவரே கட்சியின் தலைமைப் பொறுப்பை வகிப்பார் எனவும் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.
கட்சியின் யாப்பு கடந்த வருடம் இதுதொடர்பில் மாற்றப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் 2024ஆம் ஆண்டுவரை அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு ரணில் விக்கிரமசிங்கவே தலைமைப் பொறுப்பை வகிப்பார் என்றும் கூறினார்.
இதுதொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
தற்போதைய அரசியல் நிலைவரங்களை பார்க்கையில் எந்தக் கட்சி வேட்பாளரும் ஜனாதிபதித் தேர்தலில் 50 வீதத்தை எட்டப்போவதில்லை என்ற தோற்றப்பாடே நிலவுகின்றது. எனினும் சஜித் பிரேமதாஸவுக்கான ஆதரவு அதிகரித்து வருகின்றது. சிறுபான்மைக் கட்சிகள் ஆதரவளிக்கும் பட்சத்திலும் ஜே.வி.பியினரின் இரண்டாவது விருப்பு தேர்வு ஐ.தே.கவாக இருக்கும் பட்சத்திலும் சஜித் இலகுவாக வெற்றி பெற முடியும்.
கோத்தாபய ராஜபக் ஷவை பொறுத்தமட்டில், அவர் சிறுபான்மை மக்களின் வாக்குகளை எதிர்பார்த்தவராக தெரியவில்லை. பெரும்பான்மை மக்களின் வாக்குகளையே அவர் எதிர்பார்த்துள்ளார்.
இதேவேளை, அண்ணளவாக 16 மில்லியன் மக்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இவர்களுள் 12 மில்லியன் பேர் பெரும்பான்மை சிங்கள மக்கள். மேலும் 4மில்லியன் பேர் தமிழ்ப் பேசும் மக்கள் அத்துடன் 9 இலட்சம் புதிய வாக்காளர்களும் உள்ளனர்.
இந்த 16மில்லியன் உத்தேச வாக்குகளில் 12 மில்லியன் பேர் வாக்களித்தால் அது 85 வீத வாக்களிப்பாக அமையும். அதேவேளை, 4மில்லியனாகவுள்ள சிறுபான்மை மக்கள் வாக்களிப்பில் ஈடுபட்டால் அது 65 வீதமாக அமையும். எவ்வாறெனினும் 65 இலட்சம் வாக்குகளை ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் பெற்றால் மாத்திரமே அவர் 50 வீத இலக்கை எட்டமுடியும்.
அந்தவகையில் புதிய வாக்காளர்கள் மற்றும் தீர்மானிக்காமல் இருக்கும் ஒரு பிரிவு வாக்காளர் ஆகியோரின் வாக்குகளும் மிகவும் முக்கியமானவை. எவ்வாறு பார்த்தாலும் சிறுபான்மை மக்களின் வாக்குகள் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதில் கணிசமான பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கலாம்.
அதேவேளை ஜே.வி.பியினரும் கணிசமான வாக்குகளை பெறக்கூடும். அவர்கள் பெரும் வாக்குகள் இரு பிரதான கட்சி வாக்குகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் இதுவே கள யதார்த்தமாகும்.
இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சிக்கு சாதகமான கள நிலைமைகள் காணப்படுகின்றன. ஐ.தே.க கூட்டு சிறுபான்மைக் கட்சிகளை அரவணைத்து செல்லும் அதேவேளை, கோத்தாபய ராஜபக் ஷ பெரும்பான்மை மக்களின் பௌத்த வாக்குகளையும் சிங்கள கத்தோலிக்க மக்களின் வாக்குகளையும் எதிர்பார்த்து காய்களை நகர்த்துகின்றார். அவ்வாறு பார்க்கையில், 35 இலட்சம் வாக்குகள் மாத்திரமே அவருக்கு கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன.
எனினும், கள நிலைமைகளைக் கூறமுடியாது. இது சந்தர்ப்பத்திற்கு ஏற்பவும் புதிய மற்றும் தீர்மானிக்காத வாக்காளர் பிரிவினரின் விருப்புகளையும் பொறுத்து வேறுபடும் என்றார்.