சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளின்போது அதை கட்டுபடுத்த அரசாங்கம் விரைந்து செயற்படவில்லை!

217 0

இலங்கையின் அரசியலமைப்பின் பிரகாரம் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்படுவதை சர்வதேச சட்டங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் அரசாங்கம் நாட்டில் வாழ்கின்ற பிறமதங்களைப் பின்பற்றும் மக்களைப் பக்கச்சார்பின்றி நடத்துவதுடன் அவர்களது உரிமைகளையும், சுதந்திரத்தையும் பாதுகாத்து உறுதிப்படுத்துவது அவசியமாகும் என்று கூறியிருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர்,

நாட்டில் கடந்த காலங்களில் சிறுபான்மையினச் சமூகத்தவருக்கு எதிராக வன்முறைச் சம்பவங்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட போது, அரசாங்கம் அதனைக் கட்டுபடுத்துவதற்குரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளவில்லை என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

அத்தோடு அரச தலைவர்களும், மதத்தலைவர்களும் வெறுப்புணர்வுப் பேச்சுக்கள் மற்றும் செயற்பாடுகள் என்பவற்றுக்கு எதிரான தமது நிலைப்பாட்டைப் பகிரங்கமாகத் தெரிவிப்பதுடன் பாதிக்கப்பட்ட, பின்தள்ளப்பட்ட சமூகத்துடனான தமது ஒருமைப்பாட்டை வெளிக்காட்டும் வகையில் செயற்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருக்கின்றார்.

மதச்சுதந்திரம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் அஹ்மட் ஷஹீட் கடந்த 15 ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்திருந்துடன், இன்று வரை தங்கியிருந்து இலங்கையில் மதசுதந்திரம் தொடர்பில் உள்ள நிலைவரத்தை ஆராய்ந்திருந்தார்.

தலைநகர் கொழும்பிற்கு மேலதிகமாக வடக்கு, வடமேல், கிழக்கு, மத்திய மாகாணங்களின் பல்வேறு பிரதேசங்களுக்கும் விஜயம் மேற்கொண்ட ஷஹீட் அங்கு மதம் சார்பான வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்கள், மதத்தலைவர்கள், முறைப்பாட்டாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பல தரப்பினரையும் சந்தித்தார்.

இந்நிலையில் அவரது இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் இறுதி நாளான இன்று தினம் கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்துப் பேசினார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.