மதுவரித் திணைக்களத்தின் கல்முனை பிராந்திய அலுவலகம் கடந்த ஆறுமாத காலத்திற்குள் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் ஹெரோயின், கேரள கஞ்சா, சட்டவிரோத மதுபானம் என்பனவற்றை விற்பனை செய்த குற்றத்திற்காக 264 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைதானவர்கள் கல்முனை, சம்மாந்துறை, அக்கரைப்பற்று ஆகிய நீதிமன்றங்களில் ஆஜர் செய்யப்பட்டு இவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய அலுவலக பொறுப்பாளரும் பிரதான பரிசோதகருமான சண்முகம் தங்கராஜா தெரிவித்தார்.
இவ்வாறு தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளில் ஹெரோயின் வைத்திருந்தவர்களுக்கு எதிராக கல்முனை மேல் நீதிமன்றத்தில் அதிகளவான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று ஆகிய பிரதேசங்களில் ஹெரோயின் மற்றும் கேரளக் கஞ்சா என்பனவற்றை வைத்திருந்த நபர்களை கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.