போர்க்குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியுள்ளமையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதென துரைராஜசிங்கம் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். துரைராஜசிங்கம் மேலும் கூறியுள்ளதாவது, “ஜனாதிபதித் தேர்தல் குறித்து எமது கட்சியில் உத்தியோகபூர்வமான பேச்சுவார்த்தைகள் எதுவும் இன்னும் இடம்பெறவில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில், முதலில் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட வேண்டும். அதனைத் தொடர்ந்து உத்தியோகபூர்வ வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட பின்னரே தங்களின் நிலைப்பாட்டினை தெரிவிப்பார்கள்.
ஆகையால் அவர்கள் அழைக்கும் பட்சத்தில் நாங்கள் அவருடன் கலந்துரையாடி எமது மத்திய குழுவினூடாக எமது இறுதி தீர்மானத்தை அறிவிப்போம்.
மேலும் ஜனாதிபதித் தேர்தல் இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனாலும் பொதுஜனப் பெரமுன தன்னுடைய வேட்பாளராக கோட்டாபயவை அறிவித்துள்ளது.
இவ்வாறு கோட்டாவை அறிவித்துள்ளமையானது அவசரத்தில் எடுக்கப்பட்ட முடிவாகவே பார்க்கக்கூடியதாக இருக்கின்றது.
இது தொடர்பாக தமிழ்ப் பகுதிகளில் இருந்து வந்த அபிப்பிராயங்களைப் பார்க்கின்றப்போது, பெரும்பாலானோர் எதிரான நிலைப்பாட்டில் இருப்பதனை அறியக்கூடியதாக உள்ளது.
அத்துடன் கோட்டா மீது பல யுத்தக் குற்றச்சாட்டுக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் சிலர் உட்பட பல்வேறு கொலைகள் குறித்தும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மேலும் நிதிமோசடி மற்றும் அவன்காட் விவகாரம் குறித்தும் குற்றச்சாட்டுக்கள் அவர் மீது உள்ளன.
அது மாத்திரமன்றி அவரின் அடையாள அட்டை, கடவுச்சீட்டு, வாக்காளர் பட்டியல் போன்றன விடயங்களும் அவருக்கு எதிரானதாகவே இருக்கின்றது.
இத்தனை குற்றச்சாட்டக்களும் கொண்ட ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராக வருகின்றார் என்பது மிகவும் வியப்புக்குரிய விடயம்.
ஆகையால் மக்களின் அபிப்பிராயங்களின் அடிப்படையில் நாங்களும் இவை குறித்து பரிசீலனை செய்துகொண்டிருக்கின்றோம்” என குறிப்பிட்டுள்ளார்.