ஜனநாயக தேசிய முன்னணி இம்மாதம் 31ம் திகதிக்கு முன்னர் ஸ்தாபிக்கப்படும். கூட்டணி அமைத்தல் தொடர்பில் இரு தரப்பிலும் எழுந்த பிரச்சினைகள் அனைத்தும் தற்போது தீர்வு காணும் நிலையில் உள்ளது. என மாநகரம் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்லி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
ஜனநாயக தேசிய முன்னணி விவகாரம் குறித்து வினவிய போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கத்துவம் செலுத்தும் பங்காளி கட்சிகளை ஒன்றினைத்து ஜனநாயக தேசிய முன்னணி அமைத்து உத்தேச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் கடந்த வாரம் கலந்துரையாடப்பட்டது.
ஆனால் கூட்டணி தொடர்பில் இதுவரையில் எவ்வித நிலைபாடும் எடுக்கப்படவில்லை. கூட்டணி குறித்து கலந்துரையாடும் போது பல்வேறு விடயங்களுக்கு முக்கியத்துவம் செலுத்தப்பட்டன.
ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்தவுடன் ஜனநாயக தேசிய முன்னணி உருவாக்கப்பட வேண்டும் என்று ஒரு தரப்பினரும், கூட்டணி அமைத்த பின்னர் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்று பிறிதொரு தரப்பினரும் குறிப்பிடும் நிலைப்பாட்டில் உள்ளமையினால் கூட்டணி குறித்த தீர்மானங்கள் இழுபறி நிலையிலே காணப்பட்டன என அவர் தெரிவித்தார்.