ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை நிறுவனத்துக்கு 2009 தொடக்கம் 2019 ஆம் ஆண்டின் முதல் காலாண்டு வரையிலான காலப்பகுதிக்கான மொத்த நஷ்டம் 24000 கோடி ரூபா என்றும் இதற்கு மேலதிகமாக அரசு வங்கிகள்,இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் உள்ளிட்ட அரச நிறுவனங்களுக்கு 14600 கோடி ரூபாவை ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் கடனாக செலுத்த வேண்டி உள்ளதெனவும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்)சுட்டிக்காட்டியுள்ளது.
அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்)வின் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தியினால் நேற்று புதன்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஸ்ரீலங்கன் விமான சேவை கம்பெனியின் விமானங்களை மீள் தொகுதிப்படுத்துதலும் 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட A 350-900 ரக 8 விமானங்களை சுவீகரிப்பதற்கான உடன்படிக்கையை முடிவுறுத்தல் தொடர்பான விசாரணை அறிக்கையிலேயே இவ்விபரம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தாபனம் சார் முகாமைத்துவ பலவீனங்களினால் மட்டுமன்றி அரசியல் பலம் பொருந்தியவர்களினால் புரியப்பட்ட அரசியல் தலையீடுகளினாலேயே ஸ்ரீலங்கன் விமான சேவைகள் கம்பெனி பாரிய நஷ்டத்தை சந்தித்துள்ளது. ஆகவே இத்தகைய நஷ்டத்துக்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் வரவழைத்து அவர்களுக்கான தண்டனையை வழங்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) இந்த விசாரணை அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.
அத்துடன் அமைச்சரவையின் அனுமதியின்றி முறையான செலவுப்பகுப்பாய்வு மேற்கொள்ளப்படாமல் 14 நவீன விமானங்கள் 8 வருட காலப்பகுதிக்குள் விமானத்தொகுதியில் சேர்ப்பதற்கு நிறுவனத்தின் முகாமைத்துவம் மேற்கொண்ட தீர்மானமானது தமது அதிகாரத்திணைக்கடந்து மேற்கொண்டதொரு தீர்மானமெனவும் குறித்த தீர்மானம் வெற்றியளிக்காமை தொடர்பில் உரிய அதிகாரிகள் பொறுப்புக்கூற வேண்டுமெனவும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) இந்த விசாரணை அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.