ஐக்கிய தேசியக்கட்சிக்குள் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வதிலும் ஜனநாயக தேசிய கூட்டணியை அமைப்பதிலும் முரண்பாடுகள் நிலவிவரும் நிலையில் நேற்று முன்தினம் ஐக்கிய தேசியக்கட்சிக் கும் அதன் கூட்டுக்கட்சிகளுக்குமிடையில் நடைபெற்ற கூட்டத்தில் உபகுழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதுடன் மூன்று முக்கிய தீர்மானங்களும் எடுக்கப்பட்டுள்ளன.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கூட்டணியில் அங்கம் வகிக்கவுள்ள கட்சிகளின் தலைவர்களும் ஐக்கிய தேசியக்கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர். இதன்போது ஜனநாயக தேசிய கூட்டணி அமைப்பதன் தாமதம் குறித்தும் வேட்பாளர் விவகாரம் குறித்தும் விரிவாக பேசப்பட்டுள்ளது. அதனடிப்படையிலேயே வேட்பாளர் விவகாரம் குறித்தும் ஜனநாயக தேசிய முன்னணி குறித்தும் மூன்று முக்கிய தீர்மானங்கள் இந்தக்கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில் நியமிக்கப்பட்டுள்ள இந்த உபகுழு நாளை மறுதினம் சனிக்கிழமை கூடி ஜனநாயக தேசியகூட்டணி தொடர்பில் பல முக்கிய தீர்மானங்களை எடுக்கவுள்ளது.
அதன்படி சனிக்கிழமை கூட்டத்தின்போது ஜனநாயக தேசிய கூட்டணி தொடர்பில் இறுதித்தீர்மானம் எடுக்கப்படவுள்ளதுடன் இந்தக் கூட்டணி தொடர்பாக நாட்டுக்கு அறிவிக்கும் திகதியும் அன்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்படும்.
கூட்டணி குறித்து நாட்டுக்கு அறிவிக்கும் தினத்தில் ஜனநாயக தேசிய கூட்டணிக்கான ஆவணத்தில் பங்காளிக்கட்சிகள் கையெழுத்திடவுள்ளதுடன் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரும் அறிவிக்கப்படவுள்ளார்.
இந்தக்கூட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், அதன் பிரதி தலைவர் பி. திகாம்பரம், முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் , ஐ.தே.க. பிரதித்தலைவர் சஜித் பிரேமதாஸ, மற்றும் அமைச்சர்களான அகில விராஜ் காரியவசம், ரவி கருணாநாயக்க, ராஜிதசேனாநாயக்க உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.