மருதமடு அன்னையின் பெருவிழா இன்று வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.
கடந்த ஆறாம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான இவ் விழா ஒன்பது தினங்கள் நவநாட்கள் நடைபெற்றதுடன் நேற்றுப் புதன்கிழமை மாலை நற்கருணை விழாவும் இதைத் தொடர்ந்து நற்கருணை பவனியும் ஆலயத்தில் நடைபெற்றன.
நாட்டின் நாலா பக்கங்களிலிருந்தும் இலட்சக்கணக்கான பக்தர்கள் இவ் விழாவில் கலந்து கொள்வதற்காக வந்திருப்பதைக் காணக்கூடியதாக இருந்தது.
என்றும் இல்லாதவாறு இம்முறை பலத்த பாதுகாப்புடன் ஆலய வளாகத்துக்குள் நுழைவோர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதையும் காணக்கூடியதாக இருக்கின் றது.
மடு பரிபாலகர் அருட்பணி பெப்பி சோசை அடிகளாரின் மேற்பார்வையில் மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையின் தலைமையில் நடைபெற இருக்கும் இப் பெருவிழாவில் திருப்பலியானது பதுளை மறை மாவட்ட ஆயர் மேதகு வின்சன்ட் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் நடைபெற இருப்பதுடன் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் மேதகு நோபட் அன்றாடி ஆண்டகை, குருநாகல் மறைமாவட்ட ஆண்டகை மேதகு ஹரல்ட் பெரேரா ஆகியோர் இணைந்து திரு விழா திருப்பலியை ஒப்புக்கொடுப்பர்.
இன்று நடைபெற இருக்கும் காலை பெருவிழாத் திருப்பலிகள் அதிகாலை 5 மணிக்கு மடு பரிபாலகர் அருட்பணி பெப்பி சோசை அடிகளாரின் தலைமையில் தமிழ், சிங்கள மொழிகளிலும், இதைத் தொடர்ந்து காலை 6.15 மணிக்கு நான்கு மறைமாவட்ட ஆயர்களின் கூட்டுத் திருப் பலியும் ஒப்புக்கொடுக்கப்படும்.