நீர்கொழும்பு மீரிகம பிரதான வீதியில் கட்டுவப்பிட்டிய பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த புனித செபஸ்தியார் சிலை மீது கடந்த 6 ஆம் திகதி விஷமிகளால் மேற்கொள்ளப்பட்ட கல்வீச்சுத் தாக்குதல் தொடர்பாக கட்டானை பொலிஸாரால் 20க்கு மேற்பட்டோர் விசாரணை செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கல்வீச்சு காரணமாக செபஸ்தியார் சுரூபம் வைக்கப்பட்டிருந்த கண்ணாடிப் பேழைக்கு சிறிது சேதம் ஏற்பட்டது. சம்பவத்தை அடுத்து 6ஆம் திகதி பிரதேச வாசிகள் பிரதான வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை அடுத்து அங்கு வருகை தந்த கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரை கட்டுவபிட்டிய தேவாலயத்துக்கு அழைத்து கலந்துரையாடி அனைவரும் அமைதியாகச் செயற்பட வேண்டும் என்றும், சம்பவம் தொடர்பாக உயர் மட்டத்தின் கவனத்துக்கு கொண்டு வருவதாகவும் உறுதி வழங்கினார். இதனை அடுத்து பிரதேசத்தில் அமைதி நிலவியது.
இந்தக் குண்டுத் தாக்குதலின் பின்னணியில் இருப்பவர்கள் யார்? ஏன் இதனை மேற்கொண்டார்கள்?, ஏன் எமது மக்களின் வாழ்க்கையை நாசமாக்கினார்கள்? போன்ற கேள்விகளை அரசியல் தலைவர்களிடம் மீண்டும் மீண்டும் நாம் கேட்கிறோம். நாங்கள் மிகவும் அவதானமாக நடந்துகொள்ள வேண்டும். காரணம் இது போன்ற சம்பவங்களின் பின்னணியில் யார் உள்ளார்கள் என்பது எமக்குத் தெரியாது என்று கர்தினால் பிரதேசவாசிகள் முன்னிலையில் உரையாற்றும் போது கூறினார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக கட்டானை பொலிஸ் நிலைய குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சுதத் நிவுன் எல்ல தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிரதேசத்திலுள்ள சிசிரிவி காட்சிகளையும் பொலிஸார் ஆராய்ந்துள்ளனர். ஆயினும் இதுவரை ஒருவரும் கைது செய்யப்படவில்லை என குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சுதத் நிவுன் எல்ல தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஐந்து பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ள தாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித் துள்ளார். தற்போது கட்டுவப்பிட்டிய பிரதே சம் உட்பட நீர்கொழும்பு நகரில் அமைதி நிலவுகிறது.