மீன் வாடியில் ஒருவர் அடித்துக் கொலை ; இருவருக்கு விளக்கமறியல்

273 0

திருகோணமலை – குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதுரங்குடா பகுதியில் மீன் வாடியொன்றில் அடித்துக் கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இரண்டு பேரையும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

 

திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் குமாரி ரத்னாயக்க முன்னிலையில் நேற்று மாலை (13) ஆஜர்படுத்திய போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்கள்-ஹலாவத-ஆராய்ச்சி கட்டுவ- விஜய கட்டுவ பகுதியைச் சேர்ந்த விஜயசிங்க முதியன்சலாகே நிமால் ஸ்ரீ (வயது 56) மற்றும்  கிருலப்பனை, கூம்பிகெலே பகுதியைச் சேர்ந்த வீரப்பன் சிவா (43 வயது) எனவும் குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது- மூன்று பேரும் ஒன்றாக இணைந்து மது அருந்திவிட்டு மூவருக்கும் இடையில் ஏற்பட்ட கைகலப்பில் தலையில் அடித்து காயப்படுத்திய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டும் பயனளிக்காத நிலையில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலத்தை  திருகோணமலை சட்ட வைத்திய நிபுணர் றுச்சிர நதீர சோதனையிட்டதாகவும் தாக்குதலினால் தலையில் ஏற்பட்ட காயத்தால்   மூளையில் ஏற்பட்ட  இரத்த கசிவு காரணமாக இம்மரணம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதனையடுத்து உயிரிழந்தவரின் சடலத்தை உயிரிழந்தவரின் தாயிடம் ஒப்படைத்ததாகவும் குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.