சோபா, எக்ஸா ஒப்பந்தத்தை ஆழமாக ஆராய்ந்து மேற்கொள்ள வேண்டும் – மஹிந்த

294 0

சோபா மற்றும் எக்ஸா ஒப்பந்தங்களால் நாட்டின் பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தும் விடயங்கள் உள்ளதனால் அரசாங்கம் யாருடைய தனிப்பட்ட தேவைக்காக இதனை செய்யாமல் அதுதொடர்பில் ஆழமாக ஆராய்ந்து மேற்கொள்ள வேண்டும் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று சர்வதேச ஒப்பந்தங்கள் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

சர்வதேசத்துடன் கைச்சாத்திடப்படும் ஒப்பந்தங்கள் தொடர்பில் அரசாங்கத்துக்கு பொறுப்பு இருக்கவேண்டும். இதுவரை செய்துகொள்ளப்பட்டிருக்கும் ஒப்பந்தங்கள் மூலம் நாட்டுக்கு நன்மையை விட தீமையே அதிகமாகும்.

நாட்டின் உள்விவகாரம் தொடர்பில் முறையான தெளிவில்லாமலே ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்றனர். அரசியல் வாதிகளின் தேவைக்கு ஏற்றவகையில் ஒப்பந்தம் மேற்கொள்ளாமல் அதுதொடர்பான விசேட நிபுணர்கள் இருக்கின்றனர். அவர்களின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளவேண்டும்.

ஒப்பந்தங்கள் கைச்சாத்திடுவது நாட்டின் நன்மையை கருத்திற்கொண்டாகும். அதனால் இந்த அரசாங்கம் ஒப்பந்தம் செய்வதை மற்ற அரசாங்கம் வந்து அதனை மறுக்க முடியாது. அதனால் கைச்சாத்திடுவதற்கு முன்னர் அதுதொடர்பில் ஆழமான முறையில் ஆராய்ந்து எதிர்காலத்திலாவது நாட்டுக்கு நன்மை கிடைக்குமா என பார்க்கவேண்டும் என்றும் இதன்போது கூறினார்.