வைத்தியர் ஷாபியின் வழக்கு டிசம்பர் வரை ஒத்திவைப்பு

247 0

குருணாகல் வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீனுக்கு எதிரான வழக்கை டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி வரையில் ஒத்திவைக்க குருணாகல் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று 4 ஆவது தினமாகவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.

அசாதாரண முறையில் சொத்து சேகரித்தமை, தீவரவாதத்திற்கு உதவியமை மற்றும் கருத்தடை சத்திர சிகிச்சை மேற்கொண்டமை போன்ற குற்றச்சாட்டு தொடர்பில் வைத்தியருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் இன்று காலை 10 மணியளவில் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தார்.

வழக்கு விசாரணை ஆரம்பிக்கப்பட்ட போது குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் குறித்த வழக்கு தொடர்பான 12 பக்க அறிக்கை ஒன்று நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டிருந்தது.

குறித்த அறிக்கை வைத்தியர் தொடர்பில் மேற்கொண்ட விசாரணைகள் தொடர்பில் நீதிமன்றத்திற்கு விளக்கமளிக்கப்பட்டது.

பின்னர் வாதிகள் மற்றும் பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் தங்களது கருத்துக்களை பதிவு செய்திருந்தனர்.

குறித்த கருத்துக்களை கவனத்திற் கொண்ட நீதவான், குறித்த வழக்கை டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி வரையில் ஒத்திவைக்க உத்தரவிட்டுள்ளார்.