யாழ் நகரின் வரலாற்று இடங்கள் புனரமைப்புக்காக உலகவங்கியால் தெரிவு!

359 0

ghdநாட்டின் நகர அபிவிருத்தி திட்டங்களை முன்னேற்றும் வகையில் உலக வங்கியின் அபிவிருத்தி செயற்றிட்ட உயர் மட்ட அதிகாரிகள் குழுவினர் இன்று யாழ் மாவட்டத்திற்கு பயணம் ஒன்றை மேற்கொண்டனர்.  இக்குழுவினர் எதிர்வரும் 05 ஆண்டுகளுக்கான யாழ் மாவட்ட அபிவிருத்தி செயற்றிட்டத்தினை முன்னெடுக்கும் வகையில் யாழ்ப்பாணத்திற்கு நேரடியாகப் பயணம் செய்து கள நிலைமைகளை ஆராய்ந்துள்ளனர்.

அத்துடன் இக்குழு யாழ்ப்பாண நகரின் மத்தியில் அமைந்துள்ள ஆரியகுளத்தினை நேரடியாக ஆராய்ந்துள்ளனர்.

இது தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட உதவி அரசாங்க அதிபர் எஸ். சுதர்சன் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாண மாவட்டத்தில் இதுவரை புனர் நிர்மாணம் செய்யப்படாது இருக்கும் வரலாற்று முக்கியத்துவம் மிக்க இடங்களைப் பாதுகாக்கும் நோக்கில் இக்குழுவானது அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவித்தார்.

இதனடிப்படையில், 120கிலோமீற்றர் தூரத்தைக் கொண்ட கொடிகாம வீதி, பழைய வீதியில் மாவட்டச் செயலகத்துக்கு முன்னால் அமைந்துள்ள பழைய பூங்கா, யாழ்ப்பாணக் கோட்டையின் உட்புற மற்றும் வெளிப்புற அபிவிருத்திகள், யாழ் நகர் இயற்கை வள செயற்றிட்டங்கள் மற்றும் புராதன குளங்களான புல்லுக்குளம், ஆரிய குளம், தாவரங்குளம் ஆகியவற்றின் புனரமைப்பு வேலைகளைச் செய்வதற்கு இக்குழுவினர் இணக்கம் கண்டுள்ளனர்.

இச்செயலமர்வில் உலகவங்கியின் நகர அபிவிருத்தி மற்றும் மாவட்டச் செயலகத்தின் உயரதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.