மட்டக்களப்பில் துப்பாக்கி மீட்பு!

286 0

மட்டக்களப்பில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியும் ரவைகளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செம்மன் ஓடை பிரதேசத்திலுள்ள கால்வாய் ஒன்றிலிருந்து கைவிடப்பட்ட நிலையில் ரி-56 ரக துப்பாக்கி ஒன்றும் அதற்கு பயன்படுத்தும் மெகசீன் மற்றும் ரவைகளையும் மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனஞ்சய பெரமுன தெரிவித்தார்.

 

இன்று வியாழக்கிழமை (30.05.2019) காலை தமக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த பிரதேசத்திற்கு சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டபோது பிளாஸ்ரிக் குழாய் ஒன்றினுள் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் குறித்த துப்பாக்கியும் ரவைகளும் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.