அரசாங்கத்தின் முன்னோக்கிய நகர்வுகளை கண்டு அச்சம் கொண்டதன் காரணமாகவே தேவையற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அதனூடாக அரசியல் இலாபம் தேடிக் கொள்ள எதிர்த்தரப்பினர் முயற்சி செய்கின்றனர்.
அரசாங்கத்தை விமர்சிப்பதுனூடாக ஆட்சியை கைப்பற்றிக் கொள்ளலாம் என்ற பகல் கனவு ஒருபோதும் பயனளிக்காது என ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் தயாகமகே தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்ட வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின்போது அரச வருமானம் முறையற்ற அரசமுறை கடன்களுக்கு வட்டியினை செலுத்தும் அளவிற்கே காணப்பட்டது.
ஆனால் நிலைமை தற்போது முழுமையாக மாற்றமடைந்து விட்டது. கடந்த அரசாங்கம் பெற்ற முறையற்ற அரசமுறை கடன்கள் பெருமளவில் வட்டியுடன் மீள் செலுத்தப்பட்டுள்ளன. அரசாங்கம் பல புதிய கொள்கை திட்டங்களை வகுத்தது. அனைத்து திட்டங்களுக்கும் எதிர்த்தரப்பினரே தொடர்ந்து தடைகளை ஏற்படுத்தினார்கள். அரசியலமைப்புக்கு முரணாக அரசியல் சதியின் ஊடாக ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி 52 நாட்கள் முறையற்ற நிர்வாகத்தை மேற்கொண்டமையின் விளைவு இன்றும் தொடர்கின்றன.
ஐக்கிய தேசிய கட்சி நவீன திட்டங்களை உள்ளடக்கிய புதிய பல கொள்கை திட்டங்களை வகுத்து அதனடிப்படையில் பொருளாதார நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்கின்றது. அரசாங்கத்தின் செயற்பாடுகளை கண்டு இன்று எதிர்த்தரப்பினர் அச்சம் கொண்டுள்ளனர். இதன் காரணமாகவே போலியான குற்றச் சாட்டுக்களை முன்வைத்து அதனூ டாக அரசியல் இலாபம் தேடிக் கொள்ள முயற்சிக்கின்றனர்.
2020 ஆம் ஆண்டு ஆட்சியை கைப்பற்றுவதற்கு எதிர்த் தரப்பினரிடம் எவ்வித முறையான திட்டங்களும் கிடையாது. அரசாங்கத்தை விமர்சித்து அதனூடாக ஆட்சியை கைப்பற்றிக் கொள்ளலாம் என்று பகல் கனவு காண்பது ஒருபோதும் பயனளிக்காது.
எமது அரசாங்கத்திலும் ஒரு சில குறைபாடுகள் காணப்படுகின்றன. பல நெருக்கடிகளுக்கும், சவால்களுக்கும் மத்தியிலேயே கடந்த நான்கு வருட காலமாக அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது. ஆனால் ஒருபோதும் ஜனநாயகத்திற்கு அப்பாற்பட்டு சர்வாதிகாரமான முறையில் செயற்படவில்லை.
இதன் காரணமாகவே நாட்டு மக்கள் தமது கருத்துக்களை சுதந்திரமாக தெரிவிக்கின்றார்கள்.
இவ்வாறான பேச்சு சுதந்திரம் கூட கடந்த அரசாங்கத்தில் காணப்படவில்லை என்றார்.