பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் மற்றும் ,கலீல் மௌலவி உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினருக்கு தகவல் தெரிவித்ததாக கூறிய சகலரையும் விசாரணைக்கு அழைக்க பாராளுமன்ற தெரிவுக்குழு தீர்மானித்துள்ளது.
அடுத்த விசாரணை அமர்வுகளுக்கு முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித்த ஜெயசுந்தர, பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ குற்றப்புலனாய்வு பிரிவு பிரதானி ரவி செனவிரத்ன, பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பணிப்பாளர் வருண ஜெயசுந்தர ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்தவும் அறிக்கை ஒன்றினை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்க நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு நேற்று முதல் தடவையாக கூடியது. இதில் பாதுகாப்பு செயலாளர் மற்றும் தேசிய புலனாய்வு பிரதானி சிசிர மென்டிஸ் ஆகியோர் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தனர்.
இதன்போது புலனாய்வு பிரதானி சிசிர மென்டிஸிடம் விசாரணையை நடத்திய வேளையில் சிங்கள மொழி பத்திரிகை ஒன்றில் பிரதான செய்தியாக வெளியிடப்பட்டிருந்த பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் கூறிய கருத்தொன்றை சுட்டிக்காட்டிய உறுப்பினர் சரத் பொன்சேகா இவ்வாறான கருத்துக்கள் முன்வைக்கப்படுவது இப்போதுள்ள நிலையில் பாதிப்பானதில்லையா? என வினவினார்.
இதற்கு பதில் தெரிவித்த புலனாய்வு பிரதானி சிசிர மென்டிஸ் :- ஆம் இந்த கருத்துகள் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் ஒன்றுதான். இவ்வாறு கருத்துக்களை முன்வைக்கக்கூடாது என்றார்.
இதன்போது தெரிவுக்குழுவில் இருந்த உறுப்பினர் ரவி கருணாநாயக்க:- கலீல் மௌலவி, ஞானசார தேரர், மற்றும் பலர் சஹரான் குறித்தும் குறித்த அமைப்பு தொடர்பிலும் தகவல் தெரிவித்ததாக கூறுகின்றனர். உண்மையில் அவ்வாறான தகவல் உங்களுக்கு வழங்கப் பட்டதா? என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் தெரிவித்த புலனாய்வு பிரதானி சிசிர மென்டிஸ் :- ஊடகங்களில் இவ்வாறு அவர்கள் கூறுவதை நானும் பார்த்தேன். ஆனால் இவர்கள் எவருமே எனக்கு தகவல் தரவில்லை. இவர்களின் எந்த தகவலும் எனக்கு கிடைக்கவில்லை என்றார்.
இதன்போது குழு உறுப்பினர் நலிந்த ஜெயதிஸ்ஸ கூறுகையில்:- இந்த கருத்துக்களை முன்வைத்த ஞானசார தேரர், கலீல் மௌலவி மற்றும் இது குறித்து தகவல் கூறியதாக ஊடகங்களில் கூறிய சகல நபர்களையும் விசாரணைக்கு அழைக்க வேண்டும் என்றார்.
இதன்போது குழுவிற்கு தலைமை தாங்கிய கலாந்தி ஜெயம்பதி விக்ரமரதன;- ஆம் இந்த குழுவிற்கு சகலரும் சாட்சியமளிக்க முடியும் என கூறியுள்ளோம். பொதுமக்களும் சாட்சியங்களை வழங்க முடியும் என்ற அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே விசாரணைக்கு நபர்களை அழைக்கலாம் என்றார். அதற்கமைய ஞானசார தேரர், கலீல் மௌலவி மற்றும் தகவல் தெரிவித்ததாக கூறிய சகல நபர்களையும் விசாரணைக்கு அழைக்க தெரிவுக்குகு இணக்கம் தெரிவித்தது.
மேலும் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அடுத்த அமர்வு எதிர்வரும் 4 ஆம் திகதி பிற்பகல் 3 மணி தொடக்கம் 9 மணிவரையில் இடம்பெறவுள்ளது. இந்த விசாரணைக்கு முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித்த ஜெயசுந்தர, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ குற்றப்புலனாய்வு பிரிவு பிரதானி ரவி செனவிரத்ன, பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பணிப்பாளர் வருண ஜெயசுந்தர ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.