எஸ்.ஓ.எஸ் சிறுவர் கிராமங்கள் நிறுவனத்தின் 35 வருட நிறைவு இன்று(காணொளி)

485 0

kandyஎஸ்.ஓ.எஸ் சிறுவர் கிராமங்கள் என்னும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனத்தின் 35வது ஆண்டு நிறைவு நிகழ்வு இன்று நடைபெற்றது.

எஸ்.ஓ.எஸ்நிறுவனத்தின் திட்டமிடல் பணிப்பாளர் பி.எம்.குமார் தலைமையில் நுவரெலியா சினிசிட்டா புதிய நகர மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், நுவரெலியா மாநகர சபை முதல்வர் மஹிந்த தொடம்பே கமகே, மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம், நுவரெலியா பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதில் எஸ்.ஓ.எஸ் சிறுவர் கிராமங்கள் எனும் நிறுவனத்தின் இணையத்தளம் ஒன்று உத்தியோகபூர்வ திறந்து வைக்கப்பட்டது. மேலும் கலை, காலாச்சார நிகழ்வுகளுடன், சிறுவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது. அத்தோடு சிறுவர்களுடைய உரிமைகள், சிறுவர்களின் பொறுப்புகள் தொடர்பான கையேடுகள் வெளியிடப்பட்டன.

எஸ்.ஓ.எஸ் சிறுவர் கிராமங்கள் எனும் நிறுவனம் உலகத்தில் 121 கிளைகளை கொண்டு இயங்கி வருவதோடு நுவரெலியா மாவட்டத்தில் இக்கிளை சிறந்த முறையில் இயங்கி வருகின்றது.

குடும்பத்தால் கைவிடப்பட்ட குழந்தைகளை இவ் நிறுவனம் பொறுப்பேற்று அவர்களை சிறந்த ஒரு பிரஜையாக சமூகத்தில் உருவாக்கி வருகின்றது.

இதன் காரணமாக பல சிறுவர்கள் கல்வி கற்று பல்கலைகழகம் வரை சென்றுள்ளதோடு பலர் நல்ல தொழில் வாய்ப்பிலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.