யாழில் வாள் வைத்திருந்த இருவருக்கு விளக்கமறியல்!

424 0

யாழ்ப்பாணம் நாவாந்துறைப் பகுதியில் வாள் ஒன்றை குளத்துக்குள் வீச முற்பட்ட இளைஞன் மற்றும் அவருக்கு வாளை வழங்கியவரையும் வரும் 6 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

“வாள் சந்தேகநபருடையது இல்லை. அதனை அவர் 700 ரூபாவுக்கு அடகு பிடித்தார். பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் கிராமத்தைச் சுற்றிவளைத்ததால் வாளை குளத்துக்குள் வீசுவதற்கு நண்பரிடம் வழங்கினார். அவர் அதனை குளத்துக்குள் வீசிய போது பொலிஸார் கண்டுவிட்டனர்” என்று வாளை வீசுமாறு வழங்கிய சந்தேகநபரின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி மன்றுரைத்தார்.

யாழ்ப்பாணம் நாவந்துறைப் பகுதியில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இராணுவத்தினர், சிறப்பு அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து சுற்றிவளைப்புத் தேடுதலை முன்னெடுத்தனர். அதன்போது நாவாந்துறை நாவலர் வீதிக்கு அண்மையுள்ள குளம் ஒன்றுக்குள் வாள் ஒன்றை வீச முற்பட்ட இளைஞனை பொலிஸார் கைது செய்தனர்.

அத்துடன், அவரிடம் முன்னெடுத்த விசாரணையில் அவருக்கு வாளை வீசுமாறு வழங்கிய மற்றொருவரையும் பொலிஸார் கைது செய்தனர்.

சந்தேகநபர்கள் இருவரையும் யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல் முன்னிலையில் முற்படுத்தினர்.

இதன்போதே சந்தேகநபரின் சட்டத்தரணி மேற்கண்டவாறு மன்றுரைத்தார்.

ஏன் அந்த வாளை வாங்கி வைந்திருந்தீர்? என்று சந்தேகநபரிடம் மன்று கேள்வி எழுப்பியது.

“எனக்கு அந்த வாளைப் பார்த்த போது பிடித்திருந்தது. அதனால் அதனை 700 ரூபாவுக்கு அடகு பிடித்தேன்” என்று சந்தேகநபர் தெரிவித்தார்.

வழக்கை விசாரித்த நீதிவான், வாளை உடமையில் வைத்திருப்பது பாரதூரமானது எனக் குறிப்பிட்டு சந்தேகநபர்கள் இருவரையும் வரும் 6ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.