சென்னை சென்ட்ரல்- ஏர்போர்ட் மெட்ரோ ரெயில் சேவை பாதிப்பு

273 0

சென்னையில் சென்ட்ரல் முதல் ஏர்போர்ட் வரை இயக்கப்படும் மெட்ரோ ரெயிலில் இயந்திர கோளாறு காரணமாக மெட்ரோ சேவை பாதிப்புக்குள்ளானது. 

மெட்ரோ ரெயில் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 8 பணியாளர்கள் விதிகளுக்கு புறம்பாக செயல்பட்டதால் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதனை கண்டித்து அந்நிறுவன ஊழியர்கள் கோயம்பேடு அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இவர்களுக்கு ஆதரவாக பணி நீக்கம் செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினரும்  மெட்ரோ ரெயில் நிர்வாக அலுவலக நுழைவு வாயிலில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் கூறியும் அவர்கள் கலைந்து செல்ல மறுத்து விட்டனர்.

இந்த போராட்டத்தையடுத்து,  மெட்ரோ நிறுவனம் இன்று  ஊழியர்களுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. இதனால் மெட்ரோ சேவை வழக்கம்போல் இயக்கப்படும் என மெட்ரோ நிறுவனம் தெரிவித்திருந்தது. 

இந்நிலையில் சில இடங்களில் சிக்னல் கோளாறு காரணமாக சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து ஏர்போர்ட் வரை செல்லும் மெட்ரோ ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

மேலும் வண்ணாரப்பேட்டை முதல் ஏர்போர்ட் வரையிலான  மெட்ரோ ரெயில் சேவை வழக்கம்போல் இயக்கப்படுவதாக மெட்ரோ நிறுவனம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.