ஏழைக் குடும்பங்களுக்கு 2,000 ரூபாய் சிறப்பு நிதி திட்டம்!

319 0

வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு தலா ரூ. 2 ஆயிரம் சிறப்பு நிதியுதவி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.

கஜா புயலின் தாக்கத்தினாலும், பருவ மழை பொய்த்ததன் காரணமாகவும் தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியினாலும் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முழுவதும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் தலா ரூ. 2 ஆயிரம் சிறப்பு  நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் கடந்த 11-ந்தேதி அறிவித்தார். 

இதற்காக ரு.120 கோடி நிதி ஒதுக்கப்பட்டு துணை பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து பயனாளிகள் கணக்கெடுக்கப்பட்டனர். 

இந்நிலையில், ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதியுதவி வழங்கும் இந்த திட்டத்தை சென்னையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்து சில பயனாளிகளுக்கு அதற்கான சான்றிதழை வழங்கினார்.  இதையடுத்து பயனாளிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ் கிராமப்புறத்தில் வாழும் சுமார் 35 லட்சம் ஏழைக் குடும்பங்களும், நகர்ப்புறத்தில் வாழும் சுமார் 25 லட்சம் ஏழைக் குடும்பங்களும், ஆக மொத்தம் வறுமைக் கோட்டிற்குக்கீழ் வாழும் சுமார் 60 லட்சம் ஏழைக் குடும்பங்கள் தலா 2,000 ரூபாய் சிறப்பு நிதி உதவியைப்பெறுவார்கள். அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. 

இத்திட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.