அ.தி.மு.க. கூட்டணி 6-ந் தேதிக்குள் இறுதி செய்யப்படும்- அமைச்சர் கடம்பூர் ராஜூ

370 0

சென்னையில் வருகிற 6-ந் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் பங்கேற்பார்கள்.

திருச்செந்தூர் அருகே ஆலந்தலையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இணைவதற்கு தே.மு.தி.க.வினரும் பேசி வருகின்றனர். அனைவரும் வியக்கும் வகையில், அ.தி.மு.க தலைமையில் மெகா கூட்டணி அமையும். சென்னையில் வருகிற 6-ந் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் பங்கேற்பார்கள். நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் அ.தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார். 

முன்னதாக தூத்துக்குடியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறுகையில், ‘தமிழக முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் ஆகியோர் சாணக்கியனாக செயல்பட்டு மகத்தான கூட்டணியை அமைத்து இருக்கிறார்கள். இதை பார்த்து எதிர்க்கட்சிகள் ஆடிப்போய் இருக்கிறார்கள். எந்த தொகுதியில் யார் போட்டியிடுவது என்பதை முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் ஆகியோர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு முடிவு செய்யும். வருகிற 6-ந் தேதிக்கு முன்பாக கூட்டணி இறுதி வடிவம் பெறும். முகிலன் விரைவில் கண்டுபிடிக்கப்படுவார்’ என்றார்.