பிரேசிலில் ரெயில்கள் மோதி விபத்து!

320 0

பிரேசிலில் நின்றுகொண்டிருந்த ரெயிலின் மீது மற்றொரு ரெயில் மோதி கொண்ட விபத்தில் டிரைவர் பலியானார். 

பிரேசிலின் ரியோ டீ ஜெனிரோ நகரின் வடக்கு பகுதியில் சாவோ கிறிஸ்டோவோ என்ற இடத்தில் ரெயில் நிலையம் உள்ளது. நேற்று முன்தினம் மாலை பயணிகள் ரெயில் ஒன்று இந்த ரெயில் நிலையத்துக்கு வந்தது.

ரெயில் நின்றதும், பயணிகள் இறங்கிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மற்றொரு பயணிகள் ரெயில், நின்றுகொண்டிருந்த ரெயிலின் மீது பயங்கரமாக மோதியது. இதையடுத்து மீட்பு குழுவினர் விரைந்து வந்து தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

பயணிகள் 8 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அதே சமயம் ரெயில் என்ஜினின் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்ட டிரைவரை மீட்பதில் சிக்கல் எழுந்தது. 8 மணி நேர போராட்டத்துக்கு பிறகு அவர் மீட்கப்பட்டார். பின்னர் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.