நாங்கள் தான் உண்மையான அதிமுக என்பது உறுதியாகியுள்ளது – முதலமைச்சர் பழனிசாமி

265 0

டெல்லி ஐகோர்ட் அளித்த தீர்ப்பு குறித்து பேசிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாங்கள் தான் உண்மையான அ.தி.மு.க. என்பது உறுதியாகியுள்ளது என தெரிவித்துள்ளார். 

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வுக்கு தேர்தல் கமி‌ஷன் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து சசிகலா, டி.டி.வி.தினகரன் சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.  இந்த வழக்கில் சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோர் தரப்பில் மூத்த வக்கீல்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி, வக்கீல்கள் மீனாட்சி அரோரா, ராஜா செந்தூர்பாண்டியன் ஆகியோர் ஆஜரானார்கள்.
எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வக்கீல்கள் முகுல் ரோகத்கி, சி.எஸ்.வைத்தியநாதன், கே.வி.விஸ்வநாதன், குரு கிருஷ்ணகுமார், வக்கீல்கள் பாலாஜி ஸ்ரீனிவாசன், கவுதம் குமார், பாபு முருகவேல் ஆகியோர் ஆஜரானார்கள்.

இவ்வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் கடந்த 8-ம் தேதி முடிவடைந்த நிலையில்,  நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். 

இதற்கிடையே, டெல்லி ஐகோர்ட்டில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது நீதிபதிகள், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்தது செல்லும் என தெரிவித்தனர். 
இந்நிலையில், நாங்கள் தான் உண்மையான அ.தி.மு.க. என இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், இந்தத் தீர்ப்பின் மூலம் உண்மையான அ.தி.மு.க. நாங்கள் தான் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தீர்ப்புக்கான ஆதாரங்களை நாங்கள் கோர்ட்டில் வழங்கியுள்ளோம். நல்ல தீர்ப்பு கிட்டியுள்ளது. தினகரன் எங்களுக்கு இடையூறு கொடுக்கவே வழக்கு தொடர்ந்தார். இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் நாங்கள் சந்திக்க தயாராக இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.