எவன்கார்ட் தலைவருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

255 0

எவன்கார்ட் நிறுவன தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி மற்றும் மேஜர் ஜெனரல் பாலித்த பெர்ணான்டோ ஆகியோருக்கு எதிரான வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. 

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சசி மஹேந்திரன் முன்னிலையில் குறித்த வழக்கு இன்று (28) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 

இதன்போது இந்த வழக்கி முறைப்பாட்டாளர் சார்பான சிரேஷ்ட சட்டத்தரணி ஜனக பண்டார் உயர் நீதிமன்றத்தில் மற்றொரு வழக்கில் ஆஜராகியுள்ளதாக வழக்கை ஒத்தி வைக்குமாறு அரச தரப்பு சட்டத்தரணி கோரினார். 

அதன்படிவழக்கின் மேலதிக விசாரணைகள் ​மே மாதம் 21ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

கடந்த அரசாங்க காலத்தில், மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலையை நடத்திச் செல்வதற்கு தேவையான நடவடிக்கைகளை செய்து கொள்வதற்கு ரக்னா லங்கா தலைவராக இருந்த மேஜர் ஜெனரல் பாலித்த பெர்ணான்டோவுக்கு 355 இலட்சம் ரூபா இலஞ்சம் வழங்கியதாக எவன்கார்ட் நிறுவன தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 

இதுபோன்று பணம் வழங்கியது மற்றும் அரச உத்தியோகத்தர் என்ற வகையில் பணம் பெற்றுக் கொண்டமை ஆகியன இலஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் தண்டணைக்குறிய தவறு என்று தெரிவித்து இலஞ்சம் மற்றும் ஊழல் குற்ற விசாரணை ஆணைக்குழுவால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.