இலங்கைக்கு ஜப்பான் தொடர்ந்தும் உதவி!

243 0

கரையோர பாதுகாப்பு மற்றும் சமுத்திர பாதுகாப்பு தொடர்பில் இலங்கைக்கு ஜப்பான் தொடர்ந்தும் உதவிகளை வழங்கும் என ஜப்பானிய பிரதமரின் தேசிய பாதுகாப்பிற்கான ஆலோசகரான கென்டாரோ சொனோரா (Kentaro Sonoura) தெரிவித்தார்.

இலங்கைக்கு வருகைதந்துள்ள அவர் நேற்று பிற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தபோதே இதனை தெரிவித்தார்.

கரையோர பாதுகாப்பு மற்றும் சமுத்திர பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக இலங்கை மற்றும் ஜப்பானுக்குமிடையில் புதிய ஒத்துழைப்பு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடுவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி  சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். இதேநேரம் சமுத்திர பாதுகாப்பு பிராந்திய கரையோர பாதுகாப்பு மாநாடு இவ்வருடம் இலங்கையில் நடைபெறவுள்ளதுடன், இது பற்றியும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

ஜனாதிபதியின் கோரிக்கையின் பேரில் கடற்படையினருக்கு கரையோர பாதுகாப்பு பயிற்சிகளை வழங்கும் நவீன கப்பலொன்றை இலங்கைக்கு வழங்க இதன்போது கென்டாரோ செனரேரா இணக்கம் தெரிவித்தார்.

ஜப்பான் இலங்கைக்கு வழங்கிவரும் தொடர்ச்சியான உதவிகளுக்கு நன்றியைத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், குறிப்பாக யுத்தம் இடம்பெற்ற பிரதேசங்களில் நிலக்கன்னி வெடிகளை அகற்றுவதற்கு வழங்கிய உதவிகளை பாராட்டினார். சில பிரதேசங்களில் மேலும் பல இடங்களில் கன்னிவெடி அகற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் அதற்கு உதவுமாறும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.

ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன, ஜப்பானுக்கான இலங்கை தூதுவர் இந்த  சந்திப்பில் கலந்துகொண்டனர்.