தடைகளை உடைத்து விடுதலை முரசறைந்து எழுக தமிழராய் தலைநிமிர்வோம்! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

469 0

உலகின் மூலை முடுக்குகளில் வாழ்ந்துவரும் கடைக்கோடி தமிழரின் சுதந்திர வாழ்விற்காக அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் முன்னெடுக்கப்பட்டு வரும் விடுதலைப் போராட்டத்தின் இதயமாக தமிழர் தாயகமே என்றென்றும் விளங்கிவருகின்றது என்பதனை மீண்டுமொருமுறை முரசறையும்விதமாக ‘எழுக தமிழ்’ என எழுச்சி கோலம் பூண்டுள்ளது தமிழீழம்.

கடந்த 68 ஆண்டுகளாக எம்மை அழித்தொழித்து அடிமைப்படுத்த கங்கணம் கட்டிக்கொண்டு செயற்பட்டுவரும் இருபெரும் சிங்கள பௌத்த பேரினவாத கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கியிருக்கும் தேசிய அரசாங்கத்திற்குள் சிறைப்படுத்தப்பட்டிருக்கும் தமிழர்களது தேசிய அபிலாசைகளை வென்றெடுப்பதற்கும்…

சிங்கள தேசிய அரசாங்கத்தின் ‘நல்லாட்சி’ முழக்கத்தின் பின்னால் ஒளிந்துகொண்டு இனப்படுகொலைக்கான நீதியை தாமதப்படுத்தி தடுத்துவரும் அனைத்துலக நாடுகளின் முகத்திரையினை அம்பலப்படுத்தி, கொத்துக்குண்டுகளால் குதறியெறியப்பட்டும் பொசுபரசு குண்டுகளால் பொசுக்கப்பட்டும், உணவு, மருந்துகளை தடைசெய்தும் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட கொலை வளையத்திற்கும் தள்ளியும் கொன்று குவிக்கப்பட்ட 146,679 தமிழர்களுக்கான நீதியை பெற்றுக்கொள்வதற்கும்…

தமிழினப்படுகொலையின் சூத்திரதாரிகளை பிணையெடுக்கும் ‘நல்லாட்சி’ தந்திரத்தின் தூண்களாக நின்று அடிபணிவு அரசியல் செய்துவரும் சம்பந்தன், சுமந்திரன்களின் துரோகத்தை கருவறுத்து தாயக விடுதலையை வென்றெடுக்கவும்…

யாழ்.முற்றவெளியில் அலைகடலெனத் திரளுவோம்; சினம்கொண்ட வேங்கைகளாக சிலிர்த்தெழுவோம். வாருங்கள் தமிழர்களே வாருங்கள்!

தமிழர்களின் பாரம்பரியத் தலைநகரான யாழ்ப்பாணத்தில் உள்ள முற்றவெளி மைதானத்தில் தமிழ் மக்கள் பேரவையினரால் ஏற்பாடு செய்யப்பட்டு வரும் 24 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவிருக்கும் ‘எழுக தமிழ்’ எழுச்சிப் பேரணியானது, வதைபட்டு, உதைபட்டு, வலிகளோடும், வேதனைகளோடும் நசிந்துபோய் நாதியற்று இருக்கும் தமிழர்களின் உரிமைக்கான ஒன்றுகூடலாகும். வாருங்கள் தமிழர்களே வாருங்கள்!

ஆயுதமௌனிப்புடன் சூண்யமாகிப்போன தாயக அரசியல் வெளியானது குள்ளநரிகளின் கூடாரமாகிப்போயிக்கும் நிலையில் தமிழ் மக்கள் பேரவையின் இச்செயற்பாடு மிகமுக்கியமானதாகும்.

வட மாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களது முன்னேற்பாட்டில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரின் பங்கேற்புடனும் சமூக ஆர்வலர்களின் ஆதரவுடனும் தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை ஆகிய மூலாதாரக் கோட்பாட்டினை கருவில் சுமந்து உருவான தமிழ் மக்கள் பேரவையின் ‘எழுக தமிழ்’ எழுச்சிப் பேரணிக்கு தடைகளை உடைத்தெறிந்து விடுதலை முரசறைந்து எழுக தமிழராய் தலைநிமிர்வோம் என்ற ஓர்மத்துடன் முற்றவெளியில் அணியமாவோம். வாருங்கள் தமிழர்களே வாருங்கள்!

‘இலட்சியத்தில் ஒன்றுபட்டு உறுதிபூண்ட மக்களே வரலாற்றைப் படைப்பார்கள்’ எனும் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் புரட்சி மொழிக்கு உயிர்கொடுப்போம்; வாருங்கள் தமிழர்களே வாருங்கள்! முற்றவெளிக்கு வாருங்கள்!

eluka-thamil-pr-icet-in-tamil-page-001

eluka-thamil-pr-icet-in-tamil-page-002

‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’

அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை.