வித்தியா கொலை சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணை நடாத்த நீதவான் உத்தரவு

545 0

M

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை சந்தேக நபர்கள் 12 பேரையும் எதிர்வரும் ஒகட்டோபர் மாதம் 4 ஆம் திகதிவரைக்கும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் வை.எம்.எம்.ரியால் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் கொலைச் சம்வபம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்குமான அனுமதியினையும் நீதவான் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு வழங்கியுள்ளார்.
குறித்த வழக்கு இன்று செவ்வாக்கிழமை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே அவர் மேற்படி உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
இவ்வழக்கு இன்று ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது வழக்கின் 12 சந்தேக நபர்களும் மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர்.
மேலும் கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கம் குற்றப் புலனாய்வு பிரிவின் அதிகாரியும் மன்றில் ஆஜராகியிருந்தார். வித்தியா சார்பில் இளம் சட்டத்தரணி ரஞ்சித் குமார் மன்றில் ஆஜராகியிருந்தார்.
மன்றில் ஆஜராகியிருந்த குற்றப் புலனாய்வு பிரிவின் அதிகாரி சந்தேக நபர்களிடம் நடாத்திய மேலதிக விசாரணை அறிக்கையினை மன்றில் சமர்ப்பித்திருந்தார்.
மேலும் சந்தேக நபர்களை தடுத்து வைத்து மேலும் விசாரணைகள் நடாத்துவதற்கான அனுமதியினையும் மன்றிடம் கோரியிருந்தார்.
இந்நிலையில் சந்தேக நபர்களை தொடர்ந்து சிறையில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்வதற்கான அனுமதியினை வழங்கிய நீதவான், அவர்களை எதிர்வரும் ஒக்ட்டோபர் மாதம் 4 ஆம் திகதி செவ்வாக்கிழமைவரைக்கும் விளக்கமறியலில் வைக்குமாறும் அவர் உத்தரவிட்டிருந்தார்.