இரட்டை கோபுரம் தகர்ப்பு- நாளை 15-வது ஆண்டு தினம்

334 0

201609101322104325_twin-towers-the-15th-anniversary-of-the-day_secvpfஅமெரிக்காவின் நியூயார்க் நகரில் உலக வர்த்தக மையம் உள்ளது. அங்கிருந்த 110 அடுக்கு மாடிகளை கொண்ட இரட்டைக் கோபுரங்கள் மீது அல்-கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். அதன் 15-வது நினைவு தினம் நாளை (11-ந்தேதி) அனுசரிக்கப்படுகிறது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உலக வர்த்தக மையம் உள்ளது. அங்கிருந்த 110 அடுக்கு மாடிகளை கொண்ட இரட்டைக் கோபுரங்கள் மீது அல்-கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். அதன் 15-வது நினைவு தினம் நாளை (11-ந்தேதி) அனுசரிக்கப்படுகிறது.

உலகையே அச்சுறுத்திய இந்த தீவிரவாத தாக்குதலில் 2997 அப்பாவிகள் கொல்லப்பட்டனர். 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்களில் இன்னும் பலர் நடமாட முடியாத நிலையில் உள்ளனர்.

அல்-கொய்தா தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு பழி வாங்க இத்தாக்குதல் நடத்தப்பட்டது. கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந்தேதி இக்கொடூர சம்பவம் அரங்கேறியது.

அமெரிக்காவில் பறந்த 4 பயணிகள் விமானத்தை கடத்திய அல்-கொய்தா தீவிரவாதிகள் அவற்றில் இரண்டை நியூயார்க் இரட்டை கோபுரம் மீது மோத செய்தனர். உலகின் வர்த்தக மையமாக விளங்கிய அந்த 2 கோபுரங்களும் அடுத்தடுத்த விமான தாக்குதல்களால் முற்றிலும் நிலை குலைந்து சீட்டுக் கட்டுகள் போல் சரிந்து மண்ணோடு மண்ணாகின.

இத்தாக்குதலால் ஒட்டு மொத்த அமெரிக்காவும் நிலை குலைந்து போனது. இது ஒருபுறம் இருக்க உலகின் மிக பாதுகாப்பான இடமாக கருதப்பட்ட அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் மீதும் விமானத்தை மோதி தாக்குதல் நடத்தினர்.

வெர்ஜீனியாவில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் அமெரிக்காவின் வல்லமைக்கு சவால் விடுப்பதாக அமைந்தது. மேலும் கடத்தப்பட்ட 4-வது விமானத்தை அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை மீது மோதி வெடிக்க வைக்க முயன்றனர்.

அதே விமானத்தில் பயணம் செய்த நாட்டுப்பற்று மிக்க அமெரிக்க மக்களால் அந்த சதி முறியடிக்கப்பட்டது. இத்தாக்குதல்கள் மூலம் அமெரிக்காவுக்கு 10 பில்லியன் டாலர் (ரூ.67 ஆயிரம் கோடி) வரை இழப்பு ஏற்பட்டது.அமெரிக்காவில் நடத்தப்பட்ட தாக்குதலில் 19 அல்-கொய்தா தீவிரவாதிகள் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரும் பலியாகி விட்டனர்.

இரட்டை கோபுரம் மீதான தாக்குதல் நடந்து நாளை 14 ஆண்டுகள் முடிந்து 15-வது ஆண்டு தொடங்குகிறது.இருந்தாலும் அதில் உயிர் பிழைத்தவர்கள் உடல்நலக் குறைவால் சிலர் இன்னும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு மார்சி பார்ட்ர்ஸ் என்பவரை சிறந்த உதாரணமாக கூறலாம்.

இரட்டைக் கோபுரத்தில் பணியாற்றிய இவர் விமானத்தை மோதி தீவிரவாதிகள் தாக்கியபோது உயிர் பிழைத்தவர்களில் ஒருவர் ஆவார். இரட்டை கோபுரம் தாக்கப்பட்டபோது உடல் முழுவதும் புழுதியால் மூடப்பட்டு இவர் நடந்து வந்தபோது எடுக்கப்பட்ட போட்டோ இரட்டை கோபுர தாக்குதலின் கோரத்தை உலகுக்கு உணர்த்தியது.

தாக்குதலில் உயிர் பிழைத்தபோதும் இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். தனது சொத்தின் பெரும் பகுதியை மருத்துவத்துக்கே செலவு செய்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  இத்தாக்குதலின்போது உயிர் பிழைத்த நூற்றுக் கணக்கானோர் அதன் தாக்கத்தில் இருந்து மனதளவில் மீளாமல் வாழ்ந்து வருகின்றனர்.

அல்-கொய்தா தீவிரவாதிகளால் இடித்து தரைமாக்கப்பட்ட இரட்டை கோபுர கட்டிட இடிபாடுகள் கடந்த 2002-ம் ஆண்டு மே மாதம் வரை அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டன.விமானம் மூலம் மோதி சேதப்படுத்தப்பட்ட பென்டகன் கட்டிடம் ஒரு வருடத்தில் சீரமைக்கப்பட்டது. ஏற்கனவே இடித்து தரைமட்டமாக்கப்பட்ட இரட்டை கோபுர கட்டிடம் இருந்த பகுதியின் அருகே 2006-ம் ஆண்டு நவம்பர் 18-ந்தேதி புதிதாக ஒரு உலக வர்த்தக மைய கட்டிடம் கட்டும் பணி தொடங்கியது.

அக்கட்டிடம் கட்டும் பணி 8 ஆண்டுகள் நடந்து முடிந்தது. அதைத் தொடர்ந்து 2014-ம் ஆண்டு நவம்பர் 3-ந்தேதி அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது.தாக்குதல்கள் நடந்த இடங்களில் தற்போது நினைவிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நியூயார்க்கில் தேசிய செப்டம்பர் 11 நினைவகம் மற்றும் அருங்காட்சியகமும், வெர்ஜீனியா ஆர்லிங்டன் கவுன்டியில் பென்டகன் நினைவகமும், பென்சில்வேனியா ஷாங்ஸ்வில்லே அருகே உள்ள ஸ்டோனி கிரீக் டவுன் ஷிப்பில் பிளைட் 93 தேசிய நினைவகமும் அமைக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் நடத்தப்பட்ட நினைவு தினமான நாளை (11-ந்தேதி) இங்கு அஞ்சலி நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. அதற்கான ஏற்பாடுகளை அமெரிக்க அரசு தீவிரமாக செய்து வருகிறது.