ஊடகவியலாளர் கடத்தல்; முன்னாள் இராணுவ புலனாய்வு பொறுப்பதிகாரி கைது!

364 0

“த நேசன்” பத்திரிகையின் ஊடகவியலாளரான கீத் நோயர் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஸ்ரீலங்கா இராணுவத்தின் முன்னாள் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான அமல் கருணாசேகர கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று வியாழக்கிழமை மாலை இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஓய்வுபெற் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர, சுகயீனம் காரணமாக இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது.

இருந்த போதிலும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரது கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பின் கீழ் அவர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஓய்வுபெற் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர கடந்த 2006 தொடக்கம் 2009ஆம் ஆண்டுகாலகட்டத்தில் இராணுவ புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரியாக கடமைபுரிந்திருந்தார்.

இந்த நிலையில் இவரது கைது தொடர்பாக கல்கிஸை நீதவான் நீதிமன்றத்திற்கு அறியப்படுத்தப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டு மே மாதம் 22ஆ்ம திகதி ஊடகவியலாளர் கீத் நோயர் தெஹிவளை பகுதியில் வைத்து கடத்தப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார்.

அதன்பின்னர் தனது உயிருக்கு ஏற்பட்ட அச்சுறுத்தலை அடுத்து கீத் நோயார் தனது குடும்பத்துடன் வெளிநாட்டில் குடியேறியிருந்தார்.

“த நேசன்” பத்திரிகையின் இணை ஆசிரியரான கீத் நோயார் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர் குற்றப் புலனாய்வு பிரிவு விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த மேஜர் உட்பட 6 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment