அமெரிக்க அதிபர் தேர்தல்- கருத்து கணிப்பு டொனால்டு டிரம்ப் முன்னிலை

315 0

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் ஹிலாரி கிளிண்டனை முந்தி இருப்பதாக கருத்து கணிப்புகள் கூறுகின்றன.அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவி காலம் முடிவதை அடுத்து அங்கு வருகிற நவம்பர் 8-ந் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது.

ஒபாமாவின் ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுகிறார். குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்.

இவர்களில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பது குறித்து ஏற்கனவே பல கருத்து கணிப்புகள் வெளிவந்தன.

அதில், ஹலாரிக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. டொனால்டு டிரம்பை விட அவருக்கு கூடுதலாக 7 சதவீதம் வரை ஓட்டுகள் கிடைக்கும் என்று முந்தைய கருத்து கணிப்புகள் கூறின.

இந்த நிலையில் நேற்று சி.என்.என். டி.வி., ராய்ட்டர் செய்தி நிறுவனம், வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை மற்றும் பல நிறுவனங்கள் கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளன. அதில் பெரும்பாலான கருத்து கணிப்புகள் டொனால்டு டிரம்ப் ஹிலாரி கிளிண்டனை முந்தி இருப்பதாக கூறுகின்றன.

சி.என்.என். கருத்து கணிப்பில் டொனால்டுக்கு 45 சதவீத ஆதரவும், ஹிலாரிக்கு 43 சதவீத ஆதரவும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. ராய்ட்டர் செய்தி நிறுவன கருத்து கணிப்பில் டொனால்டுக்கு 40 சதவீதமும், ஹிலாரிக்கு 39 சதவீதமும் ஆதரவு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒயிட்ஹவுஸ் வாச் என்ற அமைப்பு வெளியிட்டுள்ள கருத்து கணிப்பில் டொனால்டுக்கு 40 சதவீதமும், ஹிலாரிக்கு 30 சதவீத ஆதரவும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாஷிங்டன் போஸ்டு வெளியிட்டுள்ள கருத்து கணிப்பு மட்டும் டொனால்டு டிரம்பை விட ஹிலாரிக்கு சற்று அதிக ஆதரவு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

சி.என்.என். கருத்து கணிப்புபடி இளைஞர்கள் மத்தியில் 50 சதவீதமும், டெனால்டுக்கு 29 சதவீதமும் ஆதரவு உள்ளது. ஆனால், பெரியவர்கள் மத்தியில் டொனால்டுக்கு 54 சதவீதமும், ஹிலாரிக்கு 35 சதவீதமும் ஆதரவு உள்ளன.

பெண்களை பொறுத்த வரையில் ஹிலாரிக்கு 53 சதவீதமும், டெனால்டுக்கு 38 சதவீதமும் ஆதரவு இருக்கின்றன. ஆனால், ஆண்கள் தரப்பில் டொனால்டுக்கு 54 சதவீதமும், ஹிலாரிக்கு 32 சதவீதமும் ஆதரவு கிடைக்கின்றன.

வெள்ளையர்கள் மத்தியில் டொனால்டுக்குதான் அதிக ஆதரவு இருக்கிறது. அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ள தீவிரவாதிகள் அச்சுறுத்தல் மற்றும் வெளிநாட்டு கொள்கைபற்றி அவர் கூறிய கருத்துக்கள் வெள்ளையர்கள் மத்தியில் அவருக்கு அதிக ஆதரவை பெற்று தந்துள்ளன.

தேர்தலுக்கு இன்னும் 2 மாதம் இடைவெளி உள்ளது. இந்த கால கட்டத்தில் இருவரும் செய்ய போகும் பிரசாரத்தை வைத்து வாக்காளர்கள் மனநிலை மாறலாம் என கருதப்படுகிறது.

கருத்து கணிப்பில் முந்தி இருப்பது தொடர்பாக டொனால்டு கூறும்போது, இந்த மாதம் எனக்கு மகிழ்ச்சியான தருணத்தை உருவாக்கி இருக்கிறது என்று கூறி உள்ளார்.