யாழில் காப்புறுதி நிறுவனத்தால் 6 பிள்ளைகளின் தந்தை தற்கொலை!

13624 0

யாழ். சாவகச்சேரி பகுதியில் நஞ்சருந்திய நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

சாவகச்சேரி – சராசரி வடக்கை சேர்ந்த 6 பிள்ளைகளின் தந்தையான 61 வயதுடைய சின்னப்பு கெங்காதரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.காப்புறுதி நிறுவனம் ஒன்றினால் ஏமாற்றப்பட்டதன் விளைவாக குறித்த நபர் நஞ்சருந்தி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இரண்டு நாட்களின் பின்னர் நேற்று உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது, இவர் சொந்தமாக பாரவூர்தி ஒன்றை வைத்திருந்துள்ளார். கடந்த பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி மதவாச்சி பகுதியில் எரு ஏற்ற சென்ற போது பாரவூர்தி விபத்துக்குள்ளாகி உள்ளது.பாரவூர்தியை திருத்தம் செய்வதற்கு உரிய பணத்தை இவர் காப்புறுதி செய்த நிறுவனத்திடம் இருந்து பெறுவதற்கு முயற்சி செய்துள்ளார். ஆனால், குறித்த நிறுவனம் அவருக்கு பணத்தை கொடுக்காது தொடர்ச்சியாக பின்னடித்து வந்துள்ளது.

இதனால் மனமுடைந்த இவர், கடந்த முதலாம் திகதி தனது தோட்டத்தில் இருந்த நஞ்சு மருந்தை குடித்துள்ளார்.இதையடுத்து குறித்த நபர் உடனடியாக சாவகச்சேரி வைத்திய சாலைக்கு கொண்டு சென்று பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனால், சிகிச்சை பலனின்றி இவர் நேற்று உயிரிழந்துள்ளார். இந்த மரண விசாரணையை தென்மராட்சி பிரதேச மரண விசாரணை அதிகாரி கே. இளங்கீரன் மேற்கொண்டிருந்தார்.

Leave a comment