ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் 8-ந்தேதி விண்ணில் ஏவப்படுகிறது

317 0

201609040413396494_GSLV-rocket-launched-with-INSAT-3DR-satellite-on-8_SECVPFஇன்சாட்-3டிஆர்’ செயற்கை கோளுடன் ஜி.எஸ்.எல்.வி. எப்5 ராக்கெட் 8-ந் தேதி விண்ணில் ஏவப்படுகிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தகவல்தொடர்பு, காலநிலையை முன்கூட்டியே அறிந்துகொள்வதற்காக 2,211 கிலோ எடை கொண்ட ‘இன்சாட்-3டிஆர்’ என்ற செயற்கை கோளை வடிவமைத்துள்ளது. இந்த செயற்கை கோள் ஜி.எஸ்.எல்.வி எப்5 ராக்கெட் மூலம் 8-ந் தேதி (வியாழக்கிழமை) விண்ணில் ஏவப்படுகிறது. இது இந்தியாவின் 10-வது ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்.
இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது: சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளத்தில் இருந்து 49.1 மீட்டர் உயரமும், 415.2 டன் எடையும் கொண்ட ஜி.எஸ்.எல்.வி எப்5 ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான கவுண்ட்டவுன் 6 அல்லது 7-ந் தேதி தொடங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இந்த ஏற்பாடுகள் 8-ந் தேதி மாலை 4.10 மணிக்கு முடிவு அடைந்தவுடன், ‘இன்சாட்-3டிஆர்’  செயற்கை கோளுடன் ஜி.எஸ்.எல்.வி. எப்5 ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுகிறது.

இந்த செயற்கைகோள் இந்தியா மட்டுமின்றி வங்காளதேசம், பூடான், மாலத்தீவு, நேபாளம், செசல்ஸ் தீவு, இலங்கை, தான்சானியா போன்ற நாடுகளின் வானிலை மாற்றங்களையும் அறிவிக்கும். குறிப்பாக கடல்வழி போக்குவரத்துக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும். கப்பல்களுக்கு வழிகாட்டுவது, இந்திய ராணுவத்துக்கு தகவல்களை அளிப்பது போன்ற பணிகளை மேற்கொள்ளும்.

தரையில் இருந்து புறப்பட்டுச் சென்ற 20 நிமிடங்களில் ராக்கெட்டில் இருந்து ‘இன்சாட்-3டிஆர்’ செயற்கைகோள் பிரிந்து செல்லும். இந்த செயற்கைகோளின் ஆயுட்காலம் 10 ஆண்டுகள்.

இந்த செயற்கைகோளுடன் ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் ஸ்ரீஹரிகோட்டாவில் தயார் நிலையில் உள்ளன. இவ்வாறு விஞ்ஞானிகள் கூறினார்கள்.