தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் மனோ கோரிக்கை

321 0

mano-ganesanபுதிய தேர்தல் முறை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சிறுபான்மை கட்சிகளின் சார்பாக தமது நிலைப்பாடுகளை முன்வைக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

ஜனநாயக இளைஞர் இணைய வாராந்த கருத்தரங்கின் போது தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

தேர்தல் தொகுதிகளுக்கும், விகிதாசார ஆசனங்களுக்கும் இடையேயான விகிதாசாரம் 60க்கு 40 என்ற அடிப்படையில் அமைய வேண்டும் என ஆலோசிக்கப்படுகின்றது.

அத்துடன் ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு இரண்டு மாகாணசபை தொகுதிகள் அமைய வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

இதன்மூலம் நாடாளுமன்ற தேர்தல் முறைமை மட்டுமல்ல, மாகாண சபை தேர்தல் முறையிலும் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை, தற்போது 160ஆக உள்ள தேர்தல் தொகுதிகள் 140ஆக குறைக்கப்படவுள்ளது.

இதன்மூலம் சிறிய தொகுதிகள் ஒன்றிணைக்கப்படும்.

வடக்கு கிழக்கு மாகாணங்களுக்க வெளியில் வாழும் தமிழ் முஸ்லிம் மக்களுக்கான பிரத்தியேக தேர்தல் தொகுதிகளை அமைப்பதில் சவால்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் விகிதாசாரமாக ஒதுக்கப்படுகின்ற 93 ஆசனங்களில் இருந்து சிறுபான்மையினர் தமக்கான ஆசனங்களை பெற்று கொள்வதற்கு போராடவேண்டிய நிலை ஏற்படும் எனவும் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.