வடக்கு, கிழக்கை இணைக்க ஒரு போதும் விடப்போவதில்லையாம்- ரிசாத் பதியுதீன்

348 0

rishad-bathiudeen-350-newsநீதிமன்ற தீர்ப்பின்மூலம் பிரிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தை மீண்டும் வடக்கு மாகாணத்துடன் இணைப்பதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி ஒருபோதும் துணைபோகாது என கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் தெரிவித்தார். நேற்று முன்தினம் இடம்பெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின்மூலம் முஸ்லிம்களின் அபிலாஷைகளை புறந்தள்ளிவிட்டே வடக்குடன் கிழக்கு இணைக்கப்பட்டது. இதனால் முஸ்லிம் சமூகம் சொல்லொணா துயரங்களை அனுபவித்துள்ளது. வடக்கில் தமிழர் ஒருவரும், கிழக்கில் முஸ்லிம் ஒருவரும் ஆட்சி செய்யும் நிலையில் கிழக்கு மாகாண சபையில் தமிழர், சிங்களவர், முஸ்லிம் என மூன்ற இனத்தையும் சார்ந்தவர்கள் அமைச்சர்களாக மக்களுக்கு சேவையாற்றுகின்றனர்.

இந்தநிலையில் வடக்கையும் கிழக்கையும் இணைத்து மக்களின் சந்தோசமான சகவாழ்வை சீர்குலைக்க தேவையில்லை. கிழக்கில் வாழும் தமிழ் புத்தி ஜீவிகள் யதார்த்தமாக சிந்திக்கின்ற அரசியல் தலைமைகளும் கிழக்கை வடக்குடன் இணைத்து மக்களை அடிமைகளாக்குவதை விரும்பவில்லை என்பதை மறைமுகமாக சொல்லி வருகின்றனர். மேலும் எதிர்காலத்தில் அரசாங்கம் முன்னெடுக்கவுள்ள அரசியல் யாப்பு சீர்திருத்தம், அதிகாரப்பகிர்வு தொடர்பிலும், ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் தங்கள் நிலைப்பாட்டை மிகவும் தெளிவாக முன்மொழிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.