இலங்கையருக்கு பிரித்தானியாவில் சிறை தண்டனை

659 0

1402652573-0091குடிவரவு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவருக்கு பிரித்தானியாவில் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இலங்கையர், மாணவர் நுழைவு அனுமதியில் பிரித்தானியாவுக்கு சென்ற நிலையில் நுழைவு அனுமதி முடிவடைந்ததும் போலியான இத்தாலிய நாட்டின் அடையாளத்துடன் தொடர்ந்தும் அங்கு தங்கியிருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 29ஆம் திகதியன்று ஹவுன்ஸ்லோ என்ற இடத்தில் இருந்து கைது செய்யப்பட்ட அவரிடம் இருந்து போலியான கடவுச்சீட்டு ஒன்றும் கைப்பற்றப்பட்டது.

அத்துடன் அவர், தொழில்வாய்ப்புக்காக பெற்றுக்கொண்ட போலியான நுழைவு அனுமதி ஆவணமும் கைப்பற்றப்பட்டது.

இந்தநிலையில் ஐசல்வேத் கிரவுண் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டார்.

இதனையடுத்து அவருக்கு 15 மாத சிறைத்தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறைத்தண்டனை முடிவடைந்தவுடன் அவரை நாடு கடத்துமாறும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.