அக்டோபர் 17-ந்தேதி உள்ளாட்சி தேர்தல்?

340 0

201609021025295358_next-week-announces-civic-polls-october-17th_SECVPFஅக்டோபர் 17-ந்தேதி உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெறும் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அடுத்த வாரம் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர் பார்க்கப்படுகிறது.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளின் பதவிக்காலம் அடுத்த மாதம் 24-ந்தேதியுடன் முடிவடைகிறது.இதைத் தொடர்ந்து புதிய உறுப்பினர்கள் 25-ந்தேதி பதவி ஏற்க வேண்டும்.இதற்காக உள்ளாட்சி பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மாநில தேர்தல் ஆணையர் சீத்தாராமன் ஒவ்வொரு மாவட்ட கலெக்டருடன் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து விரிவான ஆலோசனை நடத்தி வருகிறார்.சட்டசபை தேர்தலின் போது பயன்படுத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை வார்டு வாரியாக பிரித்து பட்டியல் சரி பார்க்கும்பணி தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வருவதால் எந்தெந்த வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.சென்னையில் உள்ள 200 வார்டுகளில் 100 வார்டுகள் பெண்கள் வார்டாக மாற்றப்பட்டுள்ளது. இந்த பட்டியல் விரைவில் வெளியிடப்பட உள்ளதாக அதிகாரி தெரிவித்தார்.இதேபோல் நகராட்சி, பேரூராட்சிகளில் பெண்களுக்கு ஒதுக்கப்படும் வார்டுகள் விவரமும் விரைவில் வெளியிடப்பட உள்ளது.

இதுவரை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ளவர்கள் கவுன்சிலரை தேர்ந்தெடுக்க ஒரு ஓட்டு, மேயர் மற்றும் தலைவர்களை தேர்ந்தெடுக்க ஒரு ஓட்டு என 2 ஓட்டு போட்டனர்.

ஆனால் இந்த தேர்தலில் மேயர் மற்றும் நகராட்சி, பேரூராட்சி தலைவர்களை கவுன்சிலர்களே தேர்ந்தெடுக்க உள்ளதால் இனி பொதுமக்கள் ஒரு ஓட்டு போட்டால் போதும்.

புதிய உறுப்பினர்கள் அக்டோபர் 25-ந்தேதிக்குள் பதவி ஏற்க வேண்டும் என்பதால் அதற்கு 10 நாட்களுக்கு முன்பே தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது. அனேகமாக அக்டோபர் 17-ந்தேதி உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெறும் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அடுத்த வாரம் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர் பார்க்கப்படுகிறது.

இந்த தேர்தலில் ஒவ்வொரு கட்சியிலும் மாவட்ட செயலாளர் பரிந்துரை செய்பவருக்கே கவுன்சிலர் தேர்தலில் நிற்க ‘சீட்’ கிடைக்கும் என்பதால் மாவட்டச் செயலாளரை கட்சி பிரமுகர்கள் சுற்றி சுற்றி வருகிறார்கள்.இதனால் அரசியல்வாதிகளிடம் தேர்தல் பரபரப்பு அதிகமாகி விட்டது.