கோடீஸ்வர வர்த்தகரைக் கடத்தியவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்!

285 0

bambaகொழும்பு பம்பலப்பிட்டியைச் சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகரான சகீப் சுலைமான் அவரது நெருங்கிய ஒருவரினால் கொலை செய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவரது கொலை கப்பம் பெற்றுக்கொள்ளும் நோக்கில் இடம்பெற்ற கொலை எனத் தெரியவந்துள்ளது.

குறித்த வர்த்தகர் கப்பம் பெற்றுக்கொள்ளும் நோக்கில் கடத்தப்பட்டபோது, கடத்தல்காரர்களின் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வர்த்தகர் சகீபின் நெருங்கியவர்கள் மூலம் திட்டமிட்ட அடிப்படையில் இந்த கடத்தல் இடம்பெற்றுள்ளமை விசாரணைகளிலிருந்து கண்டறியப்பட்டுள்ளது. இவரைக் கடத்திச் சென்று மாவனல்லையிலுள்ள ஒரு இடத்தில் சிறைப்பிடித்து, அவரின் தந்தையிடம் கப்பம் பெறுவது கடத்தியவர்களின் திட்டம் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் சகீப் கடத்தல்காரர்களிடமிருந்து தப்பிச்செல்ல முயற்சித்தமையால், அவரது தலையில் தடியொன்றினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனாலேயே அவர் இறந்திருக்கலாம் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த கொலையுடன் தொடர்புடைய இருவரின் புகைப்படங்கள் காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளன. சகீப் சுலைமானின் தந்தையிடம் கப்பம் கேட்டு தொலைபேசியில் அழைப்பு விடுத்தவர்கள் இவர்கள் இருவர் என காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.

குறித்த இரு சந்தேகநபர்களும் கேகாலையிலுள்ள ஒரு பொதுத் தொலைபேசி கூடத்திலிருந்தே சகீபின் தந்தையிடம் கப்பம் கோரியுள்ளனர். இந்த கூடத்திற்கு அருகிலுள்ள சீ.சீ.டி.வி. காட்சிகளை பரிசீலனைக்குட்படுத்தியே காவல்துறையினர் குறித்த சந்தேகநபர்கள் இருவரினதும் புகைப்படங்களை இனங்கண்டுள்ளனர்.