தவறான செய்தி; 13 ‘டிவி’ சேனல்களுக்கு அபராதம்

327 0

Tamil_News_large_159549420160829044903_318_219பாகிஸ்தானில், முன்னாள் கிரிக்கெட் வீரரும், அரசியல் கட்சித் தலைவருமான இம்ரான் கான், 63, மூன்றாவது திருமணம் செய்ததாக செய்தி வெளியிட்ட, 13 ‘டிவி’ சேனல்களுக்கு, அந்த நாட்டு அரசு, தலா, ஐந்து லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெஹ்ரிக் – இ – இன்சாப் கட்சித் தலைவருமான இம்ரான் கான், பத்திரிகையாளராக இருந்த ரெஹம் கான் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்தார். ஆனால், சில மாதங்களிலேயே விவாகரத்து பெற்று, இருவரும் பிரிந்தனர். இந்நிலையில், இம்ரான் கான், பிரிட்டன் தலைநகர் லண்டனில், மூன்றாவது திருமணம் செய்ததாக, பாகிஸ்தானில் உள்ள, ‘டிவி’ சேனல்கள், சமீபத்தில் செய்தி வெளியிட்டன.

இதையடுத்து, அவதுாறாக செய்தி வெளியிட்டதாக, இம்ரான் கான் சார்பில், பாகிஸ்தான் எலக்ட்ரானிக் மீடியா ஒழுங்குமுறை ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது; பின், இந்த புகார் திரும்பப் பெறப்பட்டது. இருப்பினும், இதுகுறித்து ஒழுங்குமுறை ஆணையம் விசாரணை நடத்தியது. தவறாக செய்தி வெளியிட்டதாகக் கூறி, பாகிஸ்தானைச் சேர்ந்த, 13 ‘டிவி’ சேனல்களுக்கு, தலா ஐந்து லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. ‘இந்த அபராதத்தை கட்டத் தவறினால், உரிமம் ரத்து செய்யப்படும்’ என, ஒழுங்குமுறை ஆணையம் எச்சரித்துள்ளது.